Header Ads

Header ADS

கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு அளிக்கப்படுவதை ஆய்வு செய்யுங்கள்- எடப்பாடி பழனிசாமி அறிவுரை

கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு அளிக்கப்படுவதை ஆய்வு செய்யுங்கள்- எடப்பாடி பழனிசாமி அறிவுரை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு அளிக்கப்படுவதை கலெக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் இறுதியில் அவர் பேசியதாவது:-

அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளினால் கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 5 மாத காலத்தில் நோய்ப் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாகப் பணியாற்றியதால் நோய் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் சிகிச்சை அளித்ததால் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்து, இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு 75 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு, நோய் அறிகுறிகள் தென்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தியதால் தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவுதல், கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், வீட்டைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்றவற்றை கடைபிடித்தால் தமிழகத்தில் நோய்ப் பரவலை தடுத்து, இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல உணவை, தரமான, சத்தான, ருசியான உணவை அளிக்க வேண்டும், அதை அவ்வப்போது கலெக்டர்களும் சுகாதாரத் துறையும் ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அதிக அளவில் பரிசோதனை செய்வதன் மூலம் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். கொரோனா பரவல் ஏற்பட்ட இந்த 5 மாத காலத்தில், அனைத்து கலெக்டர்களும் திறமையான முறையில் பணியாற்றிய காரணத்தினால் பரவல் படிப்படியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில்தான் பெரும்பாலும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல, இந்திய அளவில் ஜி.டி.பி. 4 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஜி.டி.பி. 8 சதவீதமாக உள்ளது.

மேட்டூர் aணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதி வரை குறிப்பிட்ட காலத்தில் சென்றடைந்ததால், குறுவை சாகுபடி பரப்பு 3.50 லட்சம் ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 4.11 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் பேசினார்

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.