விடாது எரியும் பெருநெருப்பு.. பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்..!
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ ஒரேகான் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களில் பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் வடக்குப் பகுதியில் உள்ள நாபா பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முதல் திடீரென புதிதாக காட்டு நெருப்பு உண்டானது.
முதலில் 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பற்றி எரிந்த நெருப்பு அடுத்த சில மணி நேரங்களில் 4 மடங்காக கொளுந்து விட்டு எரிகிறது.
கிளாஸ் ஃபயர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நெருப்பு மேலும் தீவிரமாகப் பரவும் அபாயம் இருப்பதால் அதனை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பெரு நெருப்பு காரணமாக நாபா பள்ளத்தாக்கு, கலிஸ்டோகா பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மேலும் சோனோமா மற்றும் நாபா மாவட்டங்களில் உள்ள சாண்டா ரோசா மற்றும் செயின்ட் ஹெலினாவில் வசிக்கும் மக்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் நடப்பாண்டு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 37 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது. இதுவரை ஏற்பட்ட காட்டுத்தீயில் இது புதிய வரலாற்றுப் பேரழிவு என வர்ணிக்கப்பட்டுள்ளது.
No comments