எல்லையில் சீனா குவிக்கும் படைகள் - இந்தியா உஷார்..!

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள பாங்கோங் ஏரியின் தெற்கு கரையில், இந்திய ராணுவத்தின் சுடும் தூரத்திற்குள், சீனா தனது துருப்புக்களையும், டாங்குகளையும் குவித்துள்ளது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில் இந்திய ராணுவம் அதிகபட்ச உஷார் நிலையில் உள்ளது.
பாங்கோங் ஏரிக்கரையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ரிட்ஜ் லைன்களை இந்திய ராணுவம் தனது வசம் கொண்டுவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீன ராணுவம், கடந்த 30 ஆம் தேதி முதல் குருங் ஹில் மற்றும் மகர் ஹில்லுக்கு இடையே உள்ள ஸ்பேங்கூர் வெளியில் போரைத் தூண்டும் வகையில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. சீனாவின் ஆயுத பெருக்கத்தின் எதிரொலியாக இந்தியாவும் ஸ்பேங்கூர் வெளியில் தனது படைகளை அதிகரித்துள்ளது.
இதனால் இருதரப்பு படைகளும் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் தூரத்தில் நிலை கொண்டு பதற்றத்தை அதிகரித்துள்ளன. அத்துடன், சீன படைகளுக்கு உதவுவதற்காக உள்ளூர் நபர்களால் உருவாக்கப்பட்ட போராளிக்குழுக்களும் அங்கு குவிக்கப்பட்டு, ரிட்ஜ் லைன்களில் உள்ள இந்திய துருப்புக்களை அங்கிருந்து அகற்ற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
எல்லை பதற்றத்தை தணிக்க கடந்த 7 ஆம் தேதி முதல் 5 முறை ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்தன. அவற்றால் எந்த பலனும் ஏற்படாத நிலையில் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மாஸ்கோவில் சந்தித்த போது ஏற்படுத்திக் கொண்ட 5 அம்ச ஒப்பந்தத்தின்படி, சீனா பாங்கோங் ஏரிப்பகுதியில் தனது ராணுவ வலிமையை குறைக்குமா என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது
No comments