மகத்தான மனித பண்பாளர் எஸ்.பி.பி..!

பாடகர் எஸ்.பி.பி. பாலசுப்பிரமணியம் சபரிமலைக்கு சென்றிருந்தபோது, டோலியில் தன்னை சுமந்த தொழிலாளர்களின் காலில் விழுந்து வணங்கியது அவரது பணிவையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிரபலமான கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்தவகையில் ஒருமுறை சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்ட எஸ்.பி.பி. நடந்து செல்ல உடல் நிலை இடம் கொடுக்காததால் டோலி மூலம் அய்யப்பனை தரிசிக்கப் புறப்பட்டார்.
டோலியில் ஏறி அமர்வதற்கு முன்பாக தன்னை டோலியில் வைத்து சுமந்து செல்ல தயாராக நின்ற தொழிலாளர்கள் 4 பேரின் காலையும் தொட்டு வணங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலாளர்கள் நெகிழ்ந்து போய் அவரை தூக்கிவிட்டனர்.
அவருடன் மற்றொரு டோலியில் பயணிக்கத் தயாரான உறவினரையும் தொழிலாளர் காலை தொட்டு வணங்கச்செய்தது தான் மனித நேயத்தின் உச்சமாக பார்க்கப்படுகின்றது.
அதே போல தனது மனைவியுடன் வாரணாசிக்கு சென்றிருந்த போது அங்கு சிவாஸ்லோகம் பாடி இறைவனை வணங்கினார்.
இசையில் இமயம் தொட்ட போதும், செல்வங்கள் சேர்ந்த போதும் தன்னை சக மனிதரில் ஒருவனாக பாவித்து எளிமையாக வாழ்ந்து வந்த பண்பாளரான எஸ்.பி.பி, நம்மவர்கள் கற்க வேண்டிய ஒரு மகத்தான வாழ்கைப்பாடம் என்றால் மிகையல்ல...!
No comments