Header Ads

Header ADS

திருச்சியில் 6 கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன்...!

பணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்

திருச்சியில் 6 கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன், சினிமா பாணியில் போலீசாரால் மீட்கப்பட்டிருக்கிறான். தொழிலதிபருடனான பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சிறுவனின் பக்கத்து வீட்டு நபரே அவனை கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் சாலையில் உள்ள தொழிலதிபர் பி.எல்.ஏ. கண்ணப்பனின் வீட்டு முன்பு, கடந்த புதன்கிழமை மாலை அவரது 12 வயது மகன் கிருஷ்ணன் விளையாடிக்கொண்டிருந்தான். சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை இண்டிகா காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது.

உடனடியாக மாநகர போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, முக்கிய சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் உஷார்படுத்தப்பட்டன. சிறுவன் கடத்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கொண்டு காரின் பதிவெண்ணை ஆய்வு செய்தபோது, அது போலியான எண் என்பது தெரியவந்தது. இடையில் சிறுவனின் குடும்பத்தாரை போனில் அழைத்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவன், 6 கோடி ரூபாய் கொடுத்தால் சிறுவனை விட்டுவிடுகிறோம் என பேரம் பேசி இருக்கிறான்.

அவன் பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த அதே நேரம் வயலூர் சோமரசம்பேட்டை அருகே சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ ஒன்றை சிறுவனை கடத்திச் சென்ற கார் இடித்துத் தள்ளிவிட்டு சென்றது.

ஆட்டோவை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை சந்தேகத்தின் பேரில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரட்டிச் சென்றுள்ளனர். வயலூர் சோதனைச்சாவடியிலும் நிற்காமல் சென்ற காரை அங்கிருந்த போலீசாரும் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளனர்.

சிறுவன் கடத்தப்படுவதை அறிந்துதான் போலீஸ் துரத்துகிறது என்று எண்ணிய கும்பல், காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டது. காரில் இருந்து சிறுவனை மீட்ட பின்னர்தான் அது சிறுவனை கடத்திய கும்பல் என்பது போலீசாருக்குத் தெரியவந்தது.

இதனிடையே சிறுவன் கிருஷ்ணன் கொடுத்த வாக்குமூலத்தின்படி தொழிலதிபரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாணிக்க பாண்டியன் என்பவன் சிறுவனை திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. ரியல் எஸ்டேட் தொழிலில் உதவியாக இருந்த மாணிக்க பாண்டியனுக்கு தொழிலதிபர் கண்ணப்பன் கமிஷன் பணம் தர வேண்டி இருந்ததாகவும் அதனை தரமறுத்தத்தால் சிறுவனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மாணிக்க பாண்டியன், கடத்தலுக்கு உதவியதாக சரவணன், திருப்பதி, சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள பிரகாஷையும் செல்வகுமார் என்பவனையும் தேடி வருகின்றனர்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.