ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி, வாழ்வைத் தொலைத்த இளைஞர்..!

கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி, கடனாளியாகி மதுப் பழக்கத்திற்கும் தீராத மனஉளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 28 வயது இளைஞரான மதன் குமார், தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தொடக்கத்தில் பணம் நிறைய கிடைத்ததால், ஆசை கண்ணை மறைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கிய மதன், பின்னர் தோற்ற பணத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என மீண்டும் மீண்டும் கடன் வாங்கி விளையாடியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடனாளியாகி, தீராத மன உளைச்சலால் மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்மையில் புதுச்சேரியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி சுமார் 30 லட்ச ரூபாய் வரை இழந்து, மனமுடைந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, சென்னை செம்பியத்திலும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே 2 இளைஞர்களின் உயிர்குடித்த ஆன்லைன் ரம்மி, தற்போது கோவையில் மேலும் ஒருவர் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு காரணமாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி போன்ற இணைய சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
No comments