வரும் 21ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி.. வகுப்பறைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் 21ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாகவும், பொதுமுடக்கம் காரணமாகவும் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
பின்னர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பொதுமுடக்கம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் 21ம் தேதி பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆய்வகங்களில் நாற்காலிகள் மற்றும் மேசைகள் 6 அடி இடைவெளியுடன் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு இடையே தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கிருமிநாசினி பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதையும், மடிக்கணினி, நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே செல்ல தன்னார்வ அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் கதவுகள், நாற்காலிகள், பெஞ்சுகள், கழிப்பறை மற்றும் மாடிப்படிகளின் கைப்பிடிகளை கிருமி நீக்கம் செய்யவேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments