விடாது துரத்தும் பாலியல் சீண்டல்.. நேரில் களமிறங்கிய இளம்பெண்..!

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், சென்னை இளம்பெண் ஒருவர் தாமே களத்தில் இறங்கி, குற்றவாளிகள் தொடர்பான சிசிடிவி காட்சி ஆதாரங் களை சேகரித்து, போலீசில் ஒப்படைத்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண் குறித்து அலசுகிறது, இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பு..
ஒரு அநியாயம், எங்கு நிகழ்ந்தாலும், அது தனக்கோ அல்லது யாருக்கோ நிகழ்ந்தாலும், துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார், சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த இந்த 23 வயது இளம்பெண்.
ஸ்கூபா டைவிங் எனும் ஆழ்கடல் பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த செவ்வாய்க்கிழமை தனது வளர்ப்பு நாயுடன் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அத்துமீறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மூலம் கொடுத்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததால் நேரடியாக களமிறங்கியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்தார்.
நிகழ்விடத்தின் அருகே இருந்த வீடுகளில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வாங்கி ஆய்வு செய்த இளம்பெண், 3 நாட்களில் குற்றவாளிகளின் அடையாளத்தை கண்டுபிடித்தார்.
தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கி இருந்த இளம் பெண், இந்த நாட்டில் பெண்களை விட மற்றவற்றிற்கு பாதுகாப்பு அதிகம் கொடுப்பதாக வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்தை எட்டியபின், சிசி டிவி காட்சி ஆதாரங்களை போரூர் போலீசில் ஒப்படைத்த இளம்பெண், விடாது துரத்தும் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
No comments