ஆடுகள் மேய்க்க சென்ற மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை

ஆடுகள் மேய்க்க சென்ற மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை
சேலம் மாவட்டம் மல்லூர் ஆறாங்கால்திட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60).
இவர் தனது கணவர் அய்யண்ணனை பிரிந்து கடந்த 10 வருடங்களாக தனியாக வசித்து வந்தார். இந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தினமும் கூலி வேலைக்கு சென்று வந்த லட்சுமி, பின்னர் ஆடுகளை வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய வீடு காட்டுப் பகுதியில் தனியாக உள்ளது.
இந்தநிலையில், வழக்கம்போல் பட்டியில் இருந்த ஆடுகளை கூட்டிக்கொண்டு அருகே உள்ள மலைகரடு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை நேரத்தில் ஆடுகள் மட்டும் ஒவ்வொன்றாக வீடு திரும்பிய நிலையில், மூதாட்டி லட்சுமி மட்டும் வரவில்லை. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள், மலைகரடு பகுதிக்கு சென்று தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை.
இதையடுத்து வீட்டின் அருகே உள்ள புதர்களில் தேடியபோது, லட்சுமி ஆடைகள் களைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உறவினர்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நெடுஞ்சாலை ஓரமாக தனியாக வீட்டில் குடியிருந்து வந்த லட்சுமி, ஆடுகளை மேய்க்க கரடு பகுதிக்கு அழைத்துச் செல்வதை மர்மநபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து மூதாட்டியை தீர்த்துக்கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர கொலை குறித்து லட்சுமியின் தங்கை மகள் சாந்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மூதாட்டி லட்சுமிக்கு தெரிந்தவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம். அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் இதுபற்றி விசாரித்து வருகிறோம் கூடிய விரைவில் கொலையாளிகளை கைது செய்து விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments