ஜெயிலுக்கு தனிக்குடித்தனம் சென்ற கணவன் மனைவி..! குழந்தை கொலையில் நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கணவர் தனிக்குடித்தனம் வரமறுத்ததால் பெற்ற குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்ற தாயையும் கொலை செய்ய தூண்டும் மன நிலையை உருவாக்கிய தந்தையையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் - சுகன்யா தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் இருந்தனர் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தனது 4 வயது மகள் நியா சந்தோஷ்காவையும் ஒரு வயது மகன் கிருத்திகேஷையும் அடுத்தடுத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கிச்சென்ற சுகன்யா, சிறிது நேரம் கழித்து வீட்டில் ஒரு மூலையில் வந்து அமர்ந்து கொண்டார்.
காலையில் குழந்தையை எங்கே ? என்று அவரது மாமனார் மற்றும் மாமியார் கேட்ட போது பதில் சொல்லாமல் மவுனமாக இருந்துள்ளார். அவரது ஆடையில் ஈரமாக இருந்ததால் சந்தேகமடைந்து பதறிபோய் வீட்டின் எதிரில் உள்ள குளத்தில் தேடிய போது இரு பிஞ்சுகளும் நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கொலைகார தாய் சுகன்யாவை கைது செய்து விசாரித்தனர். சுகன்யாவுக்கும் அவரது மாமியாருக்கும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தாய் தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த தனது கணவரை தனிக்குடித்தனம் வருமாறு வற்புறுத்தியுள்ளார் சுகன்யா. இதனால் சுகன்யாவுக்கும் அவரது கணவர் கணேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் தாய் வீட்டை விட்டு தனியாக செல்ல விரும்பாத கணேசன் மீது சுகன்யா ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தனது கணவர் கணேசன் மீதுள்ள ஆத்திரத்தில் அவருக்கு பிறந்த இரு குழந்தைகளையும் கொலை செய்யப்போவதாக மிரட்டி வந்துள்ளார். அதனை கணவர் கண்டு கொள்ளாமல் இருந்ததால், ஆத்திரத்தில் இரு குழந்தைகளையும் தூக்கிச்சென்று குளத்தில் மூழ்கடித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுகன்யா மனநிலை பாதிக்கப்பட்டவர் போல மாறுவதற்கு கணவனின் செயல்பாடுகளே காரணம் என்பது கண்டறியப்பட்டது. முன்னதாக குழந்தைகளை கொலை செய்யப்போவது தெரிந்தும் தடுக்காமல் இருந்து மனைவியை கொலை செய்ய தூண்டியதாக கணவர் கணேசனையும் கொலை வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.
தனிக்குடித்தன மோகத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் கொலைகாரியான சுகன்யாவையும், குழந்தைகள் மீது அக்கறை இல்லாத கணேசனையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயில் குடித்தனத்திற்கு அழைத்து சென்றனர்.
கணவன் மனைவிக்குள் முறையான புரிதல் இல்லையென்றால் கூட்டுக்குடித்தனம் மட்டுமல்ல தனிக்குடித்தனமும் தீரா சுமையாக மாறி இல்லத்தரசிகளை மனநோயாளியாக்கி விபரீத செயல்களை செய்ய தூண்டி விடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!
No comments