குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி
கிருஷ்ணகிரி
வேலைக்கு செல்ல கணவர் அனுமதி மறுத்ததால், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலைக்கு முயன்றார். இதில், ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், துவாரகபுரியை சேர்ந் தவர் சக்திவேல், 31. பேக்கரி கடை ஊழியர்; இவரது மனைவி சரண்யா, 23; ஐந்து மற்றும் ஒன்றரை வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. கிருஷ்ணகிரியில் உள்ள நகைக்கடைக்கு வேலைக்கு சென்று வந்த சரண்யா, குழந்தைகள் பிறந்த பின், வேலைக்கு செல்லவில்லை. மீண்டும் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டியபோது, கணவர் அனுமதிக்கவில்லை.
இதனால், மனமுடைந்த சரண்யா, 13ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, தன் குழந்தைகளுக்கு பாலில் எலி மருந்தை கலந்து கொடுத்து விட்டு, தானும் குடித்துள்ளார். தகவலை, தன் அக்கா கலைவாணிக்கு, மொபைல் போனில் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், சரண்யா வீட்டிற்கு சென்று, குழந்தைகள் மற்றும் சரண்யாவை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஒன்றரை வயது குழந்தை, 15ம் தேதி உயிரிழந்தது. கே.ஆர்.பி., அணை போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments